செய்திகள்
கொலை

மதுரையில் முன் விரோதத்தில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை- 7 பேர் கைது

Published On 2019-07-20 10:14 GMT   |   Update On 2019-07-20 10:14 GMT
முன் விரோதத்தில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை:

மதுரை கரும்பாலை நடுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பட்டா ராஜசேகர் (வயது 27). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இரவு ராஜசேகர் ஏவி பாலம் வைகை ஆற்றில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் திடீரென அரிவாளுடன் விரட்டியது. உயிருக்கு பயந்து ராஜசேகர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் வைகை ஆற்றில் உள்ள மண்டபம் அருகே ராஜசேகரை பிடித்து அந்த கும்பல் அரிவாளால் சர மாரியாக வெட்டியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட பின் கொலை கும்பல் அங்கிருந்து சென்றது.

இதுகுறித்த தகவல் அறிந்த விளக்குத்தூண் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கரும்பாலை பி.டி. காலனியைச் சேர்ந்த சந்திரபாண்டி (வயது41) உள்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையுண்ட பட்டா ராஜசேகரும், சந்திர பாண்டியும் கூட்டாளிகள். இவர்களுக்குள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து பட்டா ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்திரபாண்டியை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

ஆனாலும் இந்த சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக ராஜசேகரை கொலை செய்ய சந்திரபாண்டி திட்டம் தீட்டியதாக தெரிகிறது. நேற்று இரவு சந்திரபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முருகன் (40), பாண்டியராஜன் (28), ஆறுமுகம் (23), வினோத் (18), பிரேம்குமார் (18), மாரிமுத்து (18) ஆகியோர் அரிவாளால் பட்டா ராஜசேகரை கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சந்திர பாண்டி உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பூச்சி மணி, காமாட்சி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News