செய்திகள்
செயின் பறிப்பு

கொல்லங்கோடு அருகே கோவிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

Published On 2019-07-19 11:46 GMT   |   Update On 2019-07-19 11:46 GMT
கொல்லங்கோடு அருகே கோவிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 4 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

கொல்லங்கோடை அடுத்த வள்ளவிளை பாலிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மரியதாசன். மீனவர். இவரது மனைவி ரீத்தம்மாள்(வயது63).

இவர் நேற்று வீட்டில் இருந்து அருகில் உள்ள ஆலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றதும் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தார்கள்.

அவர்கள் ரீத்தம்மாள் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் ஒருவர் இறங்கி அவரிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அந்த வாலிபர் ரீத்தம்மாள் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.

இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை இருக்கமாக பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் கொள்ளையன் அவரது கையை தட்டி விட்டு கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூதாட்டி ரீத்தாம்மாள் கூறிய அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து செயினை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News