செய்திகள்
கைது

திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவன் கடத்தல்- தந்தை, மகன் கைது

Published On 2019-07-17 06:23 GMT   |   Update On 2019-07-17 06:23 GMT
திருவண்ணாமலை அருகே ரூ.1 லட்சம் பணம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடததி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

கலசபாக்கம் அடுத்த கிடாம்பாளையம் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் பலராமன், (49). விவசாயி. இவர் ஜவ்வாதுமலை கானமலை போங்கனூர் கிராமத்தை சேர்ந்த பூசி என்ற பெரியபையன் (40) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு தனது நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளார்.

அந்த நிலத்தில் பூசி கடந்த 3 ஆண்டுகளாக பயிர் செய்து வந்துள்ளார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் கொடுத்த ரூ.1 லட்சத்தை பலராமனிடம் திருப்பி கேட்டார். பலராமனால் பணம் கொடுக்க முடியவில்லை. நிலத்தை விற்றுதான் கொடுக்க முடியும் என்று கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பூசி, அவரது மகன் ஏழுமலை (24), உறவினர் கோபால் ஆகிய 3 பேரும் சேர்ந்து பலராமன் வீட்டில் இல்லாத நேரத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் கோபாலகிருஷ்ணனை (12) ஜவ்வாதுமலைக்கு கடத்தி சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பலராமன் கடலாடி போலீசில் புகார் செய்தார். ஜவ்வாதுமலை போலீசார் விரைந்து சென்று பூசி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்டு பூசி மற்றும் அவரது மகன் ஏழுமலை ஆகிய 2 பேரையும் பிடித்து கடலாடி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையையும், பூசியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News