ஊத்துக்கோட்டை அருகே பஸ்சில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது
திருவள்ளூர்:
போரூரைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் தனது 1½ வயது குழந்தையுடன் ஊத்துக்கோட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் குழந்தையுடன் ரம்யா நின்றபடி பயணம் செய்தார். அப்போது இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் ஒருவர் குழந்தையை கொடுக்கும்படி ரம்யாவிடம் இருந்து வாங்கி வைத்துக்கொண்டார்.
திருவள்ளூர் அருகே ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றபோது குழந்தையை திடீரென ரம்யாவிடம் கொடுத்துவிட்டு அந்த பெண் இறங்க முயன்றார்.
அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயின் மாயமாகி இருப்பதை கண்டு ரம்யா கூச்சலிட்டார்.
உடனே மற்ற பயணிகள் தப்பி செல்ல முயன்ற அந்த பெண்ணை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர் குழந்தையிடம் இருந்து செயினை திருடி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து அவரை திருவள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சீத்தஞ்சேரியை சேர்ந்த ஜூபேதா என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.