திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள பாடியூர் நாட்டாண்மை காரன் பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகோபால். இவருக்கு மாலதி (வயது 19), கிருத்திகா (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மாலதி எரியோட்டில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கிருத்திகா 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கிருஷ்ண கோபாலும், அவரது மனைவியும் கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மாலதியும் அவரது தங்கையும் தங்களது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தனர்.
இன்று காலை மாலதி தனது அறையில் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். இதை பார்த்த கிருத்திகா அலறியடித்து அருகில் இருந்த பாட்டியிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வடமதுரை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாலதியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஏ.டி.எஸ்.பி. சுகாசினி தலைமையில் வடமதுரை போலீசார் மாணவியின் பாட்டி மற்றும் அருகில் வசிக்கும் நபர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினார்.
மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? சாவுக்கு வேறு யாரேனும் காரணமா? காதல் பிரச்சினையில் இச்சம்பவம் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.