செய்திகள்
காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

கொடைரோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்ட கிராம மக்கள்

Published On 2019-07-11 12:51 GMT   |   Update On 2019-07-11 12:51 GMT
கொடைரோடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

கொடை ரோடு அருகே மாலையகவுண்டன் பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆத்தூர், காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்காத போது இந்த தண்ணீரையே இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் பழுதானது. அதனை சீரமைக்காததால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் வத்தலக்குண்டு- கொடைரோடு சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News