ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக மின்சாரம் பாதிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று காரணமாக உயர் மின் கோபுரங்களில் பழுது ஏற்பட்டு வருகிறது. நேற்று வழுதூர், உப்பூர், ரெகுநாதபுரம் மின் பாதையில் உள்ள உயர் மின் கோபுரங்களில் திடீர் பழுது ஏற்பட்டது.
இரவில் ஏற்பட்ட இந்த பழுது, மின் தடையை ஏற்படுத்தியது. இதனால் இரவு முழுவதும் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு ஆர்.காவனூர் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மண்டபம், பெருங்குளம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகள் இருளில் மூழ்கின. இங்குள்ள 76 ஆயிரம் வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள்.
இதுகுறித்து மின்வாரியத்தில் விசாரித்தபோது உயர் அழுத்த மின் கோபுரத்தில் உள்ள இன்சுலேட்டர் வெடித்துள்ளது. அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பலத்த காற்றின் காரணமாக அதிக புழுதி கிளம்பி, இன்சுலேட்டர் மீது படர்வதால் வெடித் திருக்கலாம் என்றனர்.