செய்திகள்
தற்கொலை

லாஸ்பேட்டை அருகே 10-ம்வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-07-08 09:51 GMT   |   Update On 2019-07-08 09:51 GMT
லாஸ்பேட்டை அருகே செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் 10-ம்வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேதராப்பட்டு:

லாஸ்பேட்டை அருகே தமிழக பகுதியான நாவற்குளம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் மோகன். எலக்ட்ரீசியன். இவரது மகள் காவ்யா (வயது15). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.

காவ்யா தினமும் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் செல்போனில் வரும் மெசேஜ்களை பார்த்து கொண்டு அதனை தோழிகளுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தும் காவ்யா இந்த பழக்கத்தை நிறுத்தவில்லை.

அதுபோல் நேற்று முன்தினம் இரவு காவ்யா செல்போனில் வந்த மெசேஜ்களை தோழிகளுக்கு பகிர்ந்து கொண்டு இருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்து பாடத்தில் கவனம் செலுத்தி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த காவ்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இரவு பெற்றோர் தூங்கியதும் வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். நேற்று காலை காவ்யா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து ஆரோவில் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News