மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
மதுரை:
மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 47). இவர் நேற்று இரவு கோரிப்பாளையம் ஏ.வி. பாலத்தின் கீழ் உள்ள மூங்கில்கடை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மகேஸ்வரியை பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் திடீரென அவர்கள் மகேஸ்வரியை தாக்கி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை ஏ.வி. மேம்பாலம் அருகில் உள்ள ஆழ்வார்புரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வைகை கரையோர பகுதிகளில் அடிக்கடி நகை, பணம் பறிப்பு போன்றவை நடந்து வருகிறது.
அந்தப்பகுதியில் தெரு விளக்கு வசதியும் இல்லாததால் திருடர்கள் சர்வ சாதாரணமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.