search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walk woman"

    ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 5½ பவுன் செயினை பறித்து சென்றனர்.

    ராஜாக்கமங்கலம்:

    ஈத்தாமொழியை அடுத்த வடக்குசூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி கதிரேசன் (வயது42).

    நேற்று மாலை செல்வி கதிரேசன் வீட்டின் அருகில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வத்தக்கா விளை அருகே வந்த போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் செல்வி கதிரேசன் அருகே வந்த போது அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் செல்வி கதிரேசனின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    பொதுமக்கள் வருவதை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் அவரது கையை தட்டி விட்டு கழுத்தில் கிடந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். செல்விக் கூறிய அடையாளங்களை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் ஏதாவது உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கருங்கல் உதய மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி தங்கலீலா (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து தேவிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து அவர் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தானிவிளை அருகே வரும் போது அவருக்கு எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் தங்கலீலா அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கசெயினை பறிக்க முயன்றனர்.

    இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு அலறினார். இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சுமலதா (வயது 31). இவருடைய பெற்றோர் வீடு அதே பகுதியில் உள்ளது. இதனால் நேற்று சுமலதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலை 4 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சுமலதாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.1000 மதிப்புடைய செல்போன், ரூ.150 ஆகியவற்றையும் பறித்தனர்.

    இந்த வழிப்பறி சம்பவத்தால் சுமலதா அதிர்ச்சி அடைந்தார். அவர், ‘‘திருடர்கள்... திருடர்கள்.. யாராவது வந்து அவர்களை பிடியுங்கள்’’ என சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 வாலிபர்களையும் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர். உடனே அந்த வாலிபர்கள் கத்தியை எடுத்துக்காட்டி யாராவது பக்கத்தில் வந்தால் குத்திக்கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து சுமலதா கண்ணீர் மல்க அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சுமலதாவிடம் நகை மற்றும் பணத்தை பறித்தவர்கள் சேலம் குகை, பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த கார்த்திக் (21) மற்றும் தாதகாப்பட்டி, சண்முகாநகரை சேர்ந்த பிரகாஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று இரவு போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து செல்போனையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஆனால், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வழிப்பறி செய்த நகை ஆகியவற்றை என்ன செய்தார்கள்? என்பது பற்றி 2 பேரும் சொல்லவில்லை. இவர்கள் மீது 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருக்கின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×