செய்திகள்
வறட்சி பகுதியாக அறிவிக்க கோரி வேப்பலோடை கிராமத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வேப்பலோடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வேப்ப லோடை மற்றும் அதன் சுற்றுவட்டார மானாவாரி விவசாயிகள் சங்கம் சார்பாக வேப்பலோடை கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் ரூஸ்வெல்டு தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பாண்டி, செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது வேப்பலோடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவிக்க கோரியும், கடந்த ஆண்டு செலுத்திய பயிர்காப்பீட்டுத் தொகைக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியும், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு கண்மாயில் பாலம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பலகோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன.
இதில் வேப்பலோடை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் குடும்பமாக கலந்து கொண்டனர்.