சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்யவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படாத கட்டிடங்களில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், சென்னை மாநகரின் வார்டு உதவிப் பொறியாளர், குடிநீர் உதவிப் பொறியாளர், வரி வசூலிப்பவர், குடிநீர் பணிமனை மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய 5 நபர்களை கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர் தலைமையிலும், சென்னை குடிநீர் வாரியத்தின் வட்டார பொறியாளர் தலைமையிலும், வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களின் நடவடிக்கைளை மேற்பார்வையிட, ஒவ்வொரு மண்டலத்திற்கும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தை சார்ந்த தலைமைப் பொறியாளர் அல்லது கண்காணிப்பு பொறியாளர் ஒருவர் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுக்களின் ஒட்டுமொத்த பணிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையாளர்கள் மற்றும் வட்டார துணை ஆணையாளர்களால் கண்காணிக்கப்படும்.
முதற்கட்டமாக, இக்குழு வருகின்ற 31.8.2019-க்குள் தங்களது வார்டுகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத 1000 கட்டடங்களை கண்டறிந்து, அங்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திட உரிமையாளருக்கு ஆலோசனைகளையும், விழிப்புணர்வும் வழங்கும். இதன்மூலம் மொத்தமாக, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியின் அனைத்து 200 வார்டுகளிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறினார்.