செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2019-06-22 11:00 GMT   |   Update On 2019-06-22 11:00 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி தி.மு.க. சார்பில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் யூனியன் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, மணி, ஊராட்சி செயலாளர் ரங்கசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட செம்பட்டியிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.

முன்னதாக ஆத்தூர் யூனியன் பாளையம் கோட்டை அருகில் உள்ள பிரவான்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் குடிநீர் கேட்டு கோ‌ஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல் நத்தத்தில் ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News