செய்திகள்

கும்பகோணம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

Published On 2019-06-19 12:40 GMT   |   Update On 2019-06-19 12:40 GMT
கும்பகோணம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்பகோணம்:

கும்பகோணம் நகராட்சி 2 வது வார்டு, கொட்டையூர் தோப்புத்தெருவில் பல நாட்களாக குடிநீர் வராமல் இருந்து வந்தது. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்தும், குடிநீர் வழங்காததால், நேற்று மாலை திடீரென பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த துணை தாசில்தார் செல்வம்  பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் தண்ணீர் வழங்காவிட்டால், சாலை மறியல் போராட்டம் தொடரும் என் கோஷமிட்டனர். பின்னர் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து மறியல்  கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்-திருவையாறு சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கிழக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News