செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே கார் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலாளி பலி

Published On 2019-06-17 08:53 GMT   |   Update On 2019-06-17 10:09 GMT
ஆரல்வாய்மொழி அருகே கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் சகாயஜோஸ் (வயது 32). இவரது நண்பர் மணிகண்டன் (31) தொழிலாளி.

நேற்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பணகுடியில் இருந்து அஞ்சு கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஆரல்வாய்மொழி- குமாரபுரம் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சகாயஜோஸ் ஓட்டிவந்தார். பின்னால் அவரது நண்பர் மணிகண்டன் இருந்தார்.

அந்த பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடை அருகே வரும்போது எதிரே கார் ஒன்று வந்தது. கார் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மணிகண்டனுக்கு தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சகாயஜோசுக்கு இடுப்பு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளைஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கடையை அடுத்த அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் விமல்ராஜ் (22). இவர் நேற்று இரவு நித்திரவிளை- புதுக்கடை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பார்வதிபுரம் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விமல் ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News