திருமங்கலத்தில் செல்போன் கடைக்காரரை தாக்கிய பிரபல ரவுடி கைது
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது32) இவர் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு தொட்டியப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் குருட்டு கணபதி (37) வந்தார். அவர் தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யும் படி கூறினார். அதன்படி மணிவண்ணன் ரீசார்ஜ் செய்துள்ளார். ஆனால் அதன் பிறகு பணத்தை கொடுக்காமல் குருட்டு கணபதி அங்கிருந்து புறப்பட்டார்.
இதுகுறித்து மணிவண்ணன் கேட்டபோது, கத்தியை காட்டி குருட்டு கணபதி மிரட்டினார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குருட்டு கணபதி சரமாரியாக தாக்கியதாக திருமங்கலம் நகர் போலீசில் மணிவண்ணன் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி குருட்டு கணபதியை கைது செய்தனர். இவன் மீது ஏற்கனவே பல்வேறு கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.
பிரபல ரவுடியான குருட்டு கணபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் மேலூரில் டாக்டர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள அவன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு உள்ளான்.