செய்திகள்

அவினாசியில் தலையில் கல்லைப்போட்டு கல்லூரி மாணவர் படுகொலை - நண்பர் கைது

Published On 2019-06-15 10:08 GMT   |   Update On 2019-06-15 10:08 GMT
அவினாசியில் தலையில் கல்லைப்போட்டு கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவினாசி:

சிவகங்கை மாவட்டம் அரசகுளத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் ராயர் அகஸ்டின் (வயது 20).

இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி காசிக்கவுண்டன்புதூர் நத்தக்காடு தோட்டம் என்ற பகுதியில் தங்கி சேவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது உறவினர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் ஏசுராஜ். இவரது மகன் பிரான்சிஸ் வல்லரசு (20). இவர் ராயர் அகஸ்டியனுடன் தங்கி அதே கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஏசுராஜ் இவர்களுடன் தங்கி சமையல் செய்து தருவதுடன் சமையல் வேலைக்கும் சென்று வந்தார்.

நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு ஏசுராஜ் வீடு திரும்பினார். அப்போது ராயர் அகஸ்டின் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஏசுராஜ் அலறி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

இது குறித்து அவினாசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது உடன் தங்கியிருந்த பிரான்சிஸ் வல்லரசு மாயமானது தெரியவந்தது. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்டு கிடந்த ராயர் அகஸ்டினின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரான்சிஸ் வல்லரசை கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் ராயர் அகஸ்டினின் தலையில் கல்லைப்போட்டு செய்ததை அவர் ஒப்புகொண்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மாணவர் பிரான்சிஸ் வல்லரசுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News