செய்திகள்

கரூர் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2019-06-15 08:03 GMT   |   Update On 2019-06-15 08:03 GMT
கரூர் அருகே கிணற்றில் மூழ்கி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:

கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்தவர் திருலோகசந்தர். இவரது மகன் சரவணன் (வயது 17). இவர் கரூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நிஷாந்த் (19).

இவர்களின் நண்பர்கள் ரமேஷ், கமல், குமார் ஆகிய 5 பேரும் நேற்று மாலை பஞ்சமாதேவி பூந்தோட்டத்தில் தனியாருக்கு சொந்தமான கிணற்றுக்கு குளிக்க சென்றனர். கிணற்றில் முதலில் சரவணன் குளிக்க குதித்தார். அவரை தொடர்ந்து நிஷாந்த் குதித்தார். பின்னர் 2 பேரும் தண்ணீரில் முழ்கினர். உடனே மற்ற நண்பர்கள் சத்தம் போட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இதையடுத்து கரூர் தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய மாணவர்களை தேடினர். அப்போது நிஷாந்த் உயிருடன் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தண்ணீரில் மூழ்கி பலியான சரவணனை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News