இலங்கை சிறையில் இருந்து 18 தமிழக மீனவர்கள் விடுதலை
ராமேசுவரம்:
நாகை, காரைக்காலில் இருந்து கடந்த மாதம் 3-ந் தேதி விசைப்படகுகளில் 18 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக கூறி 18 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி நுழைந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 18 தமிழக மீனவர்களைளயும் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது.
பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 18 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி நளினி உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புகிறார்கள்.