வத்தலக்குண்டுவில் வியாபாரியிடம் பணம் பறித்த கொள்ளையர்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு வெங்கிடாபட்டி தெருவை சேர்ந்தவர் சன்னாசி. இவர் மதுரை சாலையில் கமிசன் கடை வைத்துள்ளார். இன்று காலை அவர் காய்கறிகள் ஏலமிட்ட பின்னர் விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய பணம் சுமார் 1 லட்சத்தை தனது கைப்பையில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அவரை கீழே தள்ளி அவரிடம் இருந்த கைப்பையை பறித்தனர். பின்பு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே சன்னாசி திருடன் திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்களை மடக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள் பணப்பையை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
பட்டப்பகலில் வியாபாரியிடம் கொள்ளையர் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அறிந்ததும் வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.