செய்திகள்

ராஜபாளையத்தில் இளம்பெண்ணிடம் நகை பறித்தவன் கைது

Published On 2019-06-13 09:23 GMT   |   Update On 2019-06-13 09:23 GMT
ராஜபாளையத்தில் நகை பறித்து தப்ப முயன்றவனை, இளம்பெண் தந்தையுடன் சேர்ந்து மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் சிங்க ராஜா கோட்டை தெருவைச் சேர்ந்தவர் தங்கையா. இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 28). இவர் ஜவகர் மைதானம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மதியம் 1 மணியளவில் கிருஷ்ணவேணி, அழகு நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சாப்பிட புறப்பட்டார். அவர் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் கொண்ட 2 தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பினான்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி, திருடன்.... திருடன்...என கூச்சலிட்டார். அந்த நேரத்தில் எதிரே அவரது தந்தை தங்கையா வந்தார். அவர் மகளின் சத்தத்தையும் ஒரு வாலிபர் ஓடி வருவதையும் பார்த்து விரைந்து செயல்பட்டார். அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். தந்தையுடன் கிருஷ்ணவேணியும் சேர்ந்து வாலிபரை பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்திரன் விசாரணை நடத்தி வாலிபரை கைது செய்தார். இதில் அவனது பெயர் சங்கிலிக்காளை (28) என்பதும், ராஜபாளையம் தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
Tags:    

Similar News