செய்திகள்

மதுரையில் இளம்பெண்ணிடம் தகராறு- வாலிபர் அடித்துக்கொலை

Published On 2019-06-11 10:55 GMT   |   Update On 2019-06-11 10:55 GMT
மதுரையில் ரோட்டோரம் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை சேர்ந்தவர் சமயன். இவரது மகன் பாலமுருகன் (வயது37). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

பாலமுருகன் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். மதுரையில் கிடைத்த வேலையை செய்து வந்த பாலமுருகன் இரவு நேரங்களில் பிளாட்பாரம், பஸ் நிலைய பகுதிகளில் குடும்பத்துடன் தூங்குவது வழக்கம்.

நேற்று இரவு மதுரை மீனாட்சி பஜார் அருகில் ரோட்டோர பிளாட்பாரத்தில் மனைவி, குழந்தையுடன் பாலமுருகன் தூங்கினார்.

நள்ளிரவு நேரத்தில் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (31) என்பவர் குடிபோதையில் அந்த பகுதிக்கு வந்தார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனின் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்று பிரச்சனை செய்தார். மனைவியின் சத்தம் கேட்டு எழுந்த பாலமுருகன், கோபாலகிருஷ்ணனை கண்டித்துள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன் கட்டையால் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் கோபாலகிருஷ்ணனை மீட்டு மதுரைஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக திலகர் திடல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
Tags:    

Similar News