செய்திகள்

ரிஷிவந்தியம் அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2019-06-09 16:45 GMT   |   Update On 2019-06-09 16:45 GMT
ரிஷிவந்தியம் அருகே மது குடித்ததை தாய் கண்டித்ததால் தொழிலாளி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் அருகே உள்ள பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 50). இவர்களுடைய மகன் அரிகிருஷ்ணன்(26) தொழிலாளி. இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் தினசரி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அரிகிருஷ்ணன் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த கோவிந்தம்மாள், ஏன் வேலைக்கு செல்லாமல் தினசரி குடித்து விட்டு வருகிறாய் என கூறி அரிகிருஷ்ணனை கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த அரிகிருஷ்ணன் மதுவில் வி‌ஷத்தை கலந்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவிந்தம்மாள், ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News