செய்திகள்

சாயல்குடி அருகே குடும்ப தகராறில் பெண் வெட்டிக்கொலை - கணவர் வெறிச்செயல்

Published On 2019-05-25 08:00 GMT   |   Update On 2019-05-25 08:00 GMT
சாயல்குடி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கணவர் கொலை செய்தார்.

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கடுகுச்சந்தைசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி, விவசாயி. இவரது மனைவி அழகுவள்ளி (வயது60).

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி தங்கச்சிமடத்தில் வசித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக குருசாமிக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டது. நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே சச்சரவு ஏற்பட்டது. அதன் பிறகு அழகுவள்ளி தூங்கி விட்டார்.

ஆனால் குருசாமி கோபத்துடன் இருந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த அவருக்கு மனைவியை பார்த்ததும் மீண்டும் ஆத்திரம் ஏற்பட்டது. அது கொலை வெறியாக மாற வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த அழகுவள்ளியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவம் கடுகுச் சந்தைசத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை குறித்து சாயல்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அழகுவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் மனைவியை வெட்டிக்கொலை செய்த குருசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News