செய்திகள்

வாளையார் அணையில் மூழ்கி கோவை வாலிபர் பலி

Published On 2019-05-20 10:23 GMT   |   Update On 2019-05-20 10:23 GMT
வாளையார் அணையில் மூழ்கி கோவை வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் உள்ளது ஏரிமேடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 21). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பாலக்கட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். உறவினர்களை பார்த்து விட்டு மாலை மீண்டும் கோவைக்கு புறப்பட்டனர்.

வரும் வழியில் வாளையார் அணையை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அணையில் இறங்கி 5 பேரும் குளித்தனர். சிறிது நேரம் குளித்த பின்னர் மற்றவர்கள் கரையேறினர். கிருஷ்ணகுமாரை காணவில்லை.

அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இது குறித்து அங்கிருந்து பொதுமக்களிடம் கூறினர். பொதுமக்கள் வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கஞ்சிக்கோடு தீயணைப்பு வீரர்களுடன் அணையில் இறங்கி கிருஷ்ணகுமாரை தேடினர். ஆனால் தீயணைப்பு வீரர்களால் முடியவில்லை.

இதனையடுத்து பாலக்காடு நீர் மூழ்கி தேடும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து தீவிர தேடுதலுக்கு பின்னர் அணையில் இருந்து கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News