செய்திகள்

ராமேசுவரம் கோவில் ரத வீதியில் பேட்டரி காரில் பக்தர்கள் இலவசமாக செல்லலாம் - இணை ஆணையர் தகவல்

Published On 2019-05-16 18:05 GMT   |   Update On 2019-05-16 18:05 GMT
ராமேசுவரம் கோவில் ரத வீதியில் கட்டணத்துடன் பக்தர்களை ஏற்றி இறக்கி விட்டு இயக்கப்பட்டு வந்த பேட்டரி கார்களை நேற்று முதல் இலவசமாக இயக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் ரத வீதியில் வாகனங்கள் செல்ல காவல் துறையினர் தடை விதித்துள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜே.ஜே.நகரில் உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் அக்னிதீர்த்த கடற்கரையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மேலவாசல் மற்றும் வடக்கு, தெற்கு, கிழக்குரத வீதிகள் வழியாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ரதவீதிகள் வழியாகவே திரும்பி நடந்து சென்று வருகின்றனர்.

அதுபோல் பக்தர்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளாகவே திருக்கோவில் சார்பில் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன.கிழக்கு ரத வீதியில் இருந்து மேற்கு ரத வீதி சாலை வரையிலும் பேட்டரி கார்களில் செல்ல பக்தர் ஒருவருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்பட்டு 3 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ராமேசுவரம் கோவில் ரத வீதியில் கட்டணத்துடன் பக்தர்களை ஏற்றி இறக்கி விட்டு இயக்கப்பட்டு வந்த பேட்டரி கார்களை நேற்று முதல் இலவசமாக இயக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.ஆணையரின் உத்தரவை உடனடியாக அமல்படுத்திய ராமேசுவரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, 3 பேட்டரிகார்களிலும் தமிழ்,ஆங்கிலம், இந்தியில் இலவசம் என எழுதப்பட்டு நேற்று முதலே அவற்றில் ரதவீதிகளில் பக்தர்கள் சென்றுவர நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனால் பக்தர்கள் மிகந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது பற்றி திருக்கோவில் இணைஆணையர் கல்யாணி கூறியதாவது:- ராமேசுவரம் கோவில் சார்பில் 3 பேட்டரி கார்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன.மேலும் 2 பேட்டரி கார்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.அந்த பேட்டரி கார்கள் வந்த பின்பு பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள உலகஅளவில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை சுற்றி பார்க்க வசதியாக இலவசமாக இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News