செய்திகள்

அகவிலைப்படி உயர்வு கேட்டு நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-05-11 10:33 GMT   |   Update On 2019-05-11 10:33 GMT
3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய நிலையில் இன்று வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலர்கள் முன்பாக ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில மைய முடிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் சௌந்தரராஜன் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 1.1.2019 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்ட பொருளாளர் மேகநாதன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News