மதுரை முடக்குச்சாலையில் விபத்து- இளம்பெண் தலை நசுங்கி பலி
மதுரை:
மதுரை திருப்பாலை அன்புநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கீர்த்தனா (வயது 19). இவர் நேற்று காலை தனது உறவினர் வெங்கடராகவ கிருஷ்ணன் (20) என்ப வருடன் மொபட்டில் வெளியே புறப்பட்டார்.
தேனி மெயின் ரோடு முடக்குச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள வளைவை கடக்க முயன்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது லாரி டயர் கீர்த்தனா மீது ஏறியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயமடைந்த வெங்கடராகவகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காளவாசல்-தேனி பிரதான சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இருபுறமும் கடைகள் இருப்பதால் அங்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்துவதில்லை.
மேலும் காளவாசல் முதல் முடக்குச்சாலை வரை சென்டர் மீடியன் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது வழக்கதை விட அதிக நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் காளவாசல் பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ்களையும் நிறுத்தாமல் காளவாசல் திரும்பும் இடத்தில் அனைத்து பஸ்கள், ஷேர்ஆட்டோக்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை காளவாசல் பகுதியில் போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீசார் கண்டு கொள்வதில்லை.
எனவே இனிமேலாவது தனி கவனம் செலுத்தி காளவாசல்-தேனி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.