புதுவண்ணாரப்பேட்டையில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் மறியல்
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் நேற்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று காலை வரை அவர்களுக்கு மின் சப்ளை வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரத்தில் மின் விசிறியை இயக்க முடியாமல் புழுக்கத்தில் தவித்தனர்.
இந்த நிலையில் மின்தடையை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை எண்ணூர் விரைவுச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
காசிமேடு மின்பிடி துறைமுக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.