செய்திகள்

புதுவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2019-04-05 12:22 GMT   |   Update On 2019-04-05 12:22 GMT
புதுவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை சுந்தர்ராஜன் நகரை சேர்ந்தவர் அமரேசன். இவர் சினிமா தியேட்டரில் கேண்டீன் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் துணைவேல் (வயது19). இவர் புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்றுகாலை துணைவேல் செல்போனில் வந்த மெசேஜ்களை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவரது தந்தை அமரேசன் கல்லூரிக்கு செல்ல தயாராகாமல் காலையிலேயே ஏன் செல்போனை பார்த்து கொண்டிருக்கிறாய் என கண்டித்து செல்போனை பறித்து கொண்டார். இதனால் துணைவேல் சோகமானார். இதையடுத்து அவரது தாய் சமாதானம் செய்து அமாவாசைக்காக பூஜைபொருட்களை வாங்கி வருமாறு துணைவேலை கடைக்கு அனுப்பி வைத்தார்.

ஆனாலும் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த துணைவேல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து ரெட்டியார்பாளையம் ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு வந்த துணைவேல் அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில்முன் பாய்ந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடன் படித்து மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News