செய்திகள்

ஒரத்தநாடு அருகே வேளாண்மை அலுவலரிடம் வழிப்பறி - 3 வாலிபர்கள் கைது

Published On 2019-04-05 12:10 GMT   |   Update On 2019-04-05 12:10 GMT
ஒரத்தநாடு அருகே வேளாண்மை அலுவலரிடம் வழிப்பறி செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னநாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் விவேக். இவர் நேற்று நள்ளிரவு ஆழிய வாய்க்கால் ஊராட்சி தெற்குநத்தம் காட்டாற்றுபாலம் பகுதியில் சென்ற போது அவரை 3 வாலிபர்கள் திடீரென வழிமறித்தனர்.

பின்னர் திடீரென அவரை தாக்கி பணத்தை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தென்னநாடு மற்றும் சேதுராயன்குடிகாடு பகுதி இளைஞர்களை அழைத்து வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் பனக்காடு கோரிகுளம் புதுத் தெருவை சேர்ந்த சரவணன் மகன் கார்த்தி (வயது 26), கரந்தை குதிரைக்கட்ட தெருவை சேர்ந்த அந்தோணி மகன் ஜெஸ்டோ (20), ஜெயங்கொண்டம் முத்துசேர்வைக்காரன் தெருவை சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் கலைவாணன்(22) என்று தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் யார்- யாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழிப்பறி கும்பலை பிடித்த விவேக், மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் உதவி வேளாண் அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News