செய்திகள்
வேளாண்மை துறை ஊழியரை தாக்கி மனைவியிடம் 6 பவுன் தங்க நகை பறிப்பு
நல்லம்பள்ளி அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து வேளாண்மை துறை ஊழியரை தாக்கி அவரது மனைவியிடம் 6 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் போஸ்கோ (வயது35). இவர் வேளாண்மை துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யபிரியா. இவர்களுக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது. நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சுமார் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்தனர்.
ரெயில் தண்டவாளம் அருகே போஸ்கோ வீடு உள்ளது. நள்ளிரவு அந்த தண்டவாளத்தின் வழியாக ரெயில் சென்ற போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்ததால் போஸ் கோவுக்கு தெரியவில்லை. பின்னர் 2 மர்ம நபர்கள் கையில் ஆயுதங்கள் வைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது போஸ்கோ எழுந்து சத்தம் போட்டார்.
உடனே மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கினர். பின்னர் திவ்யபிரியா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த போஸ்கோவை குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போஸ்கோ அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அதே பகுதியில் சகாயராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் இருந்த கொள்ளையர்கள் கொண்டு வந்த கத்தி, செருப்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களை போட்டு விட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.