செய்திகள்

தஞ்சையில் ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீசிடம் 6 பவுன் நகை பறிப்பு

Published On 2019-04-03 11:53 GMT   |   Update On 2019-04-03 11:53 GMT
தஞ்சையில் ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீசிடம் 6 பவுன் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக இருப்பவர் கலா (வயது 36). இவர் கிழக்கு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஸ்கூட்டரில் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு அதே ஸ்கூட்டரில் தஞ்சைக்கு புறப்பட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம வாலிபர்கள் 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கலாவை பின்தொடர்ந்து வந்தனர். தஞ்சை அடுத்த துறையூண்டார்கோட்டை பகுதியில் கலா வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கலாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.

இதனால் திடுக்கிட்ட கலா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர்களை பின்தொடர்ந்து சென்றார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கலா தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பெண் போலீசிடம் நகை பறிப்ப நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News