செய்திகள்

அய்யம்பேட்டை அருகே சிகிச்சை செலவுக்கு பணம் இல்லாததால் வி‌ஷம் குடித்த தம்பதி

Published On 2019-04-03 11:27 GMT   |   Update On 2019-04-03 11:27 GMT
அய்யம்பேட்டை அருகே மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் மனமுடைந்த தம்பதியினர் வி‌ஷம் குடித்தனர். இதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே இலுப்பக்கோரை வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50). இவர்கள் மகன் ரஞ்சித்குமார் (34). இவருக்கு திருமணமாகி தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

ராஜேஸ்வரிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக ராஜேஸ்வரி அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ராஜேஸ்வரியின் மருத்துவ செலவுக்கு வருமானம் போதாமல் போகவே வெளி நபர்களிடம் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்துள்ளனர். அப்படியும் ராஜேஸ்வரியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மனமுடைந்த கணவன்- மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பூச்சி மருந்தை குடித்தனர். அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். சாமிநாதன் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News