செய்திகள்

என்ஜினீயருக்கு சம்பளம் வழங்காததால் கப்பலை பறிமுதல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-03-22 06:11 GMT   |   Update On 2019-03-22 06:53 GMT
என்ஜினீயருக்கு சம்பளம் வழங்காததால் ‘எம்.வி.சீ.ஜெல் ஒன்’ கப்பலை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt #Ship

சென்னை:

தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் மதிவாணன். கப்பல் என்ஜினீயர்.

இவர் நவி மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனம் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ‘எம்.வி.சீ. ஜெல் ஒன்’ கப்பலில் தலைமை என்ஜினீயராக நியமனம் செய்யப்பட்டார்.

6 மாத காலத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டது. அதையடுத்து அவர் 2017 அக்டோபர் மாதம் 24-ந்தேதி வேலையில் சேர்ந்தார்.

அவருக்கு மாதம் 2500 அமெரிக்க டாலர் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மதிவாணன் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி வரை அந்த கப்பலில் தலைமை என்ஜினீயராக பணியாற்றினார்.

இந்த நிலையில் தனக்கு 3 மாதம் சம்பளம் தரவில்லை. அந்த தொகையை தரவேண்டும் என்று கோரி மதிவாணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘எம்.வி.சீ.ஜெல் ஒன்’ என்ற வணிக கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்ததற்கு 3 மாதம் 8 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கினார்கள். மீதமுள்ள 3 மாதத்துக்கு சம்பளம் தரவில்லை.

எனவே தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ‘எம்.வி.சீ.ஜெல் ஒன்’கப்பலை சிறைபிடிக்க துறைமுக நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், “என்ஜினீயருக்கு சம்பளம் பாக்கி தராததால் தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலை சிறை பிடிக்க துறைமுக தலைவருக்கு உத்தரவிடுகிறேன்.

மேலும் கப்பல் உரிமையாளர்கள் ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் 14 ஆயிரத்து 833 அமெரிக்க டாலர்களை டெபாசிட் செய்ய வேண்டும். அன்றைய நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் பணத்தை செலுத்த வேண்டும். அதன்பின் கப்பல் விடுவிக்கப்படும் என்று கூறினார். #HighCourt #Ship

Tags:    

Similar News