செய்திகள்

நெல்லையில் வளர்த்த கிளியை பறக்க விட்டதால் வாலிபர் தற்கொலை

Published On 2019-03-18 13:17 GMT   |   Update On 2019-03-18 13:17 GMT
நெல்லையில் வளர்த்த கிளியை பறக்க விட்டதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள கண்டியப்பேரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன்கள் ராஜகுரு (வயது24), விஜயகுமார் (22). இவர்கள் இருவரும் நெல்லையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். 

ராஜகுரு ஓய்வு நேரங்களில் பொழுது போக்கிற்காக ஒரு கிளி வளர்த்து வந்தார். இதற்கு அவரது தம்பி விஜயகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிளியை அடைத்து வைக்க கூடாது என்றும் பறக்க விடுமாறும் அண்ணனிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுரு வேலைக்கு சென்ற போது வீட்டில் இருந்த அவரது தம்பி விஜயகுமார் கிளியை கூண்டில் இருந்து பறக்க விட்டார். வீடு திரும்பிய ராஜகுருவுக்கு கிளி இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் புகார் கூறினார். அவர் இதை கண்டு கொள்ளவில்லை.

இதனால் மனமுடைந்த ராஜகுரு தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்த பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தனர். இது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News