மாங்காட்டில் திருமண நிகழ்ச்சியில் தகராறு: கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு
பூந்தமல்லி:
மாங்காட்டை அடுத்த கொளப்பாக்கம், காந்தி தெருவை சேர்ந்தவர் தினேஷ் கார் டிரைவர்.
இவர் கொளப்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தினேஷ், அவரது நண்பர்கள் நடனம் ஆடினார்கள்.
அப்பொழுது அவர்களுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைபார்த்த உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.அதன்பின் அனைவரும் கலைந்துசென்றனர்.
தினேஷ் திருமண மண்டபத்தில் அருகே உள்ள காலி மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினார்கள்.
இதில் தினேசின் தொண்டை, முகத்தில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் கிழே விழுந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.
மைதானத்தில் ரத்த வெள்ளத்தில் தினேஷ் விழுந்து கிடப்பதை பார்த்த அவரது நண்பர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் தினேசை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.