செய்திகள்

2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் - 366 தொழில் நிறுவனங்கள் உற்பத்தி தொடக்கம்

Published On 2019-03-02 01:30 GMT   |   Update On 2019-03-02 01:30 GMT
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டவர்களில் 366 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன. #TNGovernment
சென்னை:

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டவர்களில் 366 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு, அரசு சார்பில் வழிகாட்டுதல் கூட்டம் சென்னை கிண்டியில் நடந்தது. இந்த கூட்டம் முதன்மை செயலாளர்- தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தொழில் முனைவோருக்கும், வங்கிகளுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி, தொழில் தொடங்க தேவையான கடன் வசதிகளை விரைவில் பெற நேரடி சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதை எளிமையாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையதள வழி ஒற்றைச் சாளர தகவு முறையை தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரில் இதுவரை 366 தொழில் நிறுவனங்கள், ரூ.721.80 கோடி முதலீட்டில் உற்பத்தியை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் 4,863 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 11 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு ரூ.212.46 லட்சம் தமிழக அரசின் சார்பில் முதலீட்டு மானியத்தை முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் ஆணையர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment
Tags:    

Similar News