செய்திகள்

ஊட்டியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

Published On 2019-02-28 18:06 GMT   |   Update On 2019-02-28 18:06 GMT
தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி ஊட்டியில் நடந்தது.
ஊட்டி:

தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், கடந்த ஆண்டு நீலகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள், கிராம பகுதிகளில் அரசு மூலம் விலையில்லா கறவை பசுக்கள் வழங்குதல், பசுமை வீடு வழங்கும் திட்டம், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, விலையில்லா கணினி, சைக்கிள் வழங்குதல், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் ஈராண்டு சாதனை விளக்க குறும்படம் எல்.இ.டி. மின்னணு வீடியோ வாகனம் மூலம் பொதுமக்கள் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், பூங்கா மேலாளர்கள் வித்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர். தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். 
Tags:    

Similar News