தஞ்சை அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த புதுப்பட்டினம் கோரிக்குளம் புதுதெருவை சேர்ந்தவர் பிரபாகரன். விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 22). இவர்களுக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த பாண்டியம்மாள், விஷம்குடித்து வாயில் நுரை தள்ளியப்படி இறந்து கிடந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பாண்டியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாண்டியம்மாள், வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பாண்டியம்மாளுக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் தஞ்சை ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.