ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்துக்கு தீ வைத்தவர் கைது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கி.காமாட்சிபுரம் தென்பழஞ்சி தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது42). அதே பகுதியில் சொந்தமாக நிலம் வைத்து வெள்ளைச் சோளம் பயிரிட்டு வருகிறார். மேலும் கால்நடைகளும் வளர்த்து வருவதால் தீவனங்களை தோட்டத்தில் வைத்திருந்தார்.
இந்த தோட்டத்தில் திடீரென தீப்பற்றியது. அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இது குறித்து ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதும் வெள்ளைச் சோளம், கால்நடை தீவனங்கள், வைக்கோல் போர் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.
அவரது தோட்டத்துக்கு அருகே அதே பகுதியை சேர்ந்த பிரேம் குமார் என்பவரது செல்போன் கண்டெடுக்கப்பட்டது. எனவே அவர்தான் தனது தோட்டத்திற்கு தீ வைத்திருக்க கூடும் என செல்வம் ராஜதானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம்குமார் தீ வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.