திருச்சியில் நீட் பயிற்சி மாணவி திடீர் தற்கொலை
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் சின்னையா (வயது 54). இவரது மகள் பிரியதர்ஷினி (19). சின்னையா தனது குடும்பத்தினருடன் திருச்சி பீமநகர் கணபதிபுரத்தில் வசித்து வந்தார். பிரிய தர்ஷினி திருச்சியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயின்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பிரியதர்ஷினி அவரது வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியதர்ஷினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிய வில்லை. நீட் தேர்வுக்கு படிக்க முடியாததன் காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.