கோவையில் ரவுடி கொலையில் 2 வாலிபர்கள் கைது
கோவை:
கோவை புலியகுளம் சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் லியோ மார்ட்டின் (29) இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு லியோ மார்ட்டின் அலமேலு மங்கா லே-அவுட் அருகே கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.
இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் இறந்தார்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லியோ மார்ட்டினை புலிய குளம் துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்த தருண் என்கிற இன்பிரண்ட் ராஜன் (19), கொண்டசாமி கோவில் வீதியை சேர்ந்த விக்கி என்கிற சண்முகம் (19) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன் விரோதம் காரணமாக லியோ மார்ட்டினை குத்தி கொன்றதாக தெரிவித்தனர்.
கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதில் இருந்து அடிக்கடி சந்திக்கும் போதெல்லாம் தங்களுக்கும் லியோ மார்ட்டினுக்கும் தகராறு ஏற்படும் என்றும் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கொன்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.