செய்திகள்

உடன்குடியில் டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2019-02-07 10:11 GMT   |   Update On 2019-02-07 10:11 GMT
உடன்குடியில் டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த கொள்ளையன் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி:

உடன்குடி சுல்தான்புரத்தை சேர்ந்தவர் பதூருதீன் (வயது 60). இவர் சென்னை மண்ணடியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இதற்காக குடும்பத்தினருடன் அங்கு தங்கியுள்ளார். மாதம் ஒரு முறை மட்டும் உடன்குடிக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டு மாடி பகுதி கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளான். அப்போது நள்ளிரவில் ஆள் இல்லாத வீட்டில் லைட் எரிவதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு கொள்ளையன் பொருட்களை திருடி கொண்டிருப்பதை பார்த்து சத்தம் போட்டனர். பின்னர் அவனை பிடிக்க விரட்டி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையன் சுவர் ஏறி குறித்து அங்கிருந்து தப்பினான். அப்போது அவனது செருப்புகளை விட்டு சென்றான்.

இது குறித்து பதூருதீன் சகோதரர் மகன் முகமது புகாரி என்பவர் குலசேகரன்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News