திண்டுக்கல் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண்
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி, கோபால்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 36). இவர் தனியார் மில்லில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி போதும் பொன்னு (34). இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பெரியவர்கள் இவர்களை சமாதானம் செய்து வைத்த போதும் தொடர்ந்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் போதும் பொன்னு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் போதும் பொன்னு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த சாணார்பட்டி போலீசார் போதும் பொன்னு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார். திருமணம் ஆகி 9 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுப்பெண் தூக்கு போட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.