ஆண்டிப்பட்டி அருகே ஓடை மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே வருஷநாடு, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீசாரும் ரோந்து சென்று மணல் கடத்துபவர்களை பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கண்டமனூர் சப்-இஸ்பெக்டர் இஸ்திரிகான் தலைமையிலான போலீசார் கண்டமனூர் - வேலாயுதம்பாளையம் சாலையில் புதுக்காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது ஓடையில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து முத்து (வயது 50) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.