கள்ளக்காதலை கைவிடுமாறு உறவினர்கள் கூறியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கோவை:
கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் அடிக்கடி கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
மேலும் அவர் கணவரின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து தனது உறவினர்களிடம் கூறினார். உறவினர்கள் மணிகண்டனை சந்தித்து கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர். இதனால் மணிகண்டனுக்கு அவமானம் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.