செய்திகள்

அதிமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபர்கள்

Published On 2019-01-30 11:48 GMT   |   Update On 2019-01-30 11:48 GMT
அதிமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது45). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது பெரியாம்பட்டியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார்.

அங்கு ரூ.20 ஆயிரம் எடுத்து விட்டு வண்டியை எடுப்பதற்காக வெளியே வந்தார். அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு சீட்டை காட்டி முகவரி கேட்பது போல் நடித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து மர்ம நபர்கள் ரூ.20 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் பறிமுதல் செய்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி காரிமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பஞ்சாயத்து தலைவரிடம் கத்தி முனையில் மர்ம நபர்கள் அவரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News