செய்திகள்

போராட்டம் எதிரொலி - ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது

Published On 2019-01-26 14:24 GMT   |   Update On 2019-01-26 14:24 GMT
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
கிருஷ்ணகிரி:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட 8 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகளான வெங்கடேசன், மோகன்குமார், செந்தில்குமார், அருண், சாட்சாதிபதி, அருண்குமார் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களை இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

தருமபுரி நகரில் நேற்று இரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் சுருளிநாதன், கவுரன், காவேரி, சேகர், பழனியம்மாள், குமார், பொன்ரத்தினம், யோகராசா ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 143 (அனுமதியின்றி கூடுதல்), 506/1 (கலெக்டர் அலுவலக ஊழியர்களை அநாகரீக வார்த்தைகளால் திட்டுதல்), 7(1)சி.எல்.ஏ. (தடுப்பு காவல் சட்டம்) ஆகிய 3 பிரிவுகளில் தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பழனியம்மாள் தருமபுரி கிளை சிறையிலும் மற்ற 7 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தொப்பூரில் 5 பேரும், அதியமான்கோட்டையில் 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது தவிர மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தேடி போலீசார் அவர்களது வீடுகளுக்கு சென்றனர். ஆனால் நிர்வாகிகள் யாரும் வீட்டில் இல்லை. தொடர்ந்து நிர்வாகிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #JactoGeo
Tags:    

Similar News