செய்திகள்

நாகையில் கடலில் மூழ்கி ஆந்திர சிறுவன் பலி

Published On 2019-01-16 14:53 GMT   |   Update On 2019-01-16 14:53 GMT
நாகையில் கடலில் மூழ்கி ஆந்திர சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்:

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் லாலுகார்டன் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் நேற்று நாகை அடுத்த நாகூர் தர்காவுக்கு வழிபாட்டுக்காக வந்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்மாயில் குடும்பத்தினர் மதியம் கடற்கரையில் உள்ள சில்லடி தர்காவுக்கு சென்று விட்டு கடலில் குளித்துள்ளனர்.

அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் அலையில் இஸ்மாயில் மகன் சபீர் (15) மூழ்கினார். இதில் அதிர்ச்சி அடைந்த இஸ்மாயில் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் போட்டு கதறி அழுதனர். இதற்கிடையே கடல் அலையில் சபீர் மூழ்கி பலியான நிலையில் கரையில் உடல் ஒதுங்கியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை கடற்கரை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சபீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News